Thursday 8 December 2011

தமிழ் நாட்டு பண்டைய வரலாறு - சோழர்

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. நெல்லின் மற்றொடு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்கிறார் தேவநேயப் பாவாணர். சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.
காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணி வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.
கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

தோற்றமும் வரலாறும்

சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குலங்கள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களை அண்டிய காலப் பகுதிகளைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ சாத்தியமாகவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற விபரங்கள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பனவும் ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

முற்காலச் சோழர்கள்

சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்களால் பாடப்பட்ட வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இன்னொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். இவனே முதலாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, கரிகாலன், தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். கரிகாலனுடைய அம்பு சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று தகவல் தருகிறது. பாண்டிய மன்னர்களையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். முற்காலச் சோழர்களில் பிற்காலத்தவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில், நல்லுருத்திரன், கோச்செங்கண்ணன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

 முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள் வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். வம்சம் சிதறிச் சிற்றரசர்களானார்கள். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி களப்பாளர் அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்களிடம் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிம்மவிட்டுணு பல்லவன் களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது.

களப்பிரர்கள்

நாட்டில் பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடுத்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த யாப்பெருங்காலக்காரிகையின் ஆசிரியரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடங்களை மேற்கோள்காட்டியுள்ளார். இம்மன்னர் பௌத்த மதத்தைச்சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

வீழ்ச்சி

அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூறஇயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணத்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.

தமிழ்நாட்டில் சோழர்கள்

இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்பற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச்சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவேரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத்தரவில்லை.
இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத்தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப்பாடுபட்டனர்.

பிற்காலச் சோழர்கள்

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் மேல் நிலைக்கான போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. கி.பி 850 இல் விஜயாலயன் என்பவன் சோழ மன்னனானான். அவன் அக்கால அரசியல் சூழ்நிலைகளைத் திறமையாகக் கையாண்டு முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். எனினும் அவன் கி.பி 871 இல் இறந்தான். விஜயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். முதலாம் ஆதித்தன் என்று அழைக்கப்படும் இவன் தமிழ் நாட்டு அரசியல் சதுரங்கத்தில் திறமையாகச் செயற்பட்டு சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். இவன் ஆரம்பத்தில் பாண்டியர்களுக்கு எதிராகப் பல்லவர்களுக்கு உதவியாக இருந்தாலும், பல்லவர்களிடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியபோது, தலையிட்டுத் தனக்குச் சாதகமான அபராஜித பல்லவன் வெற்றிபெற உதவினான். இது தொடர்பாக நடைபெற்ற திருப்புறம்பியப் போர், தமிழ் நாட்டிலும், சோழநாட்டின் எதிர்காலத்திலும் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராஜிதனுக்கு எதிராக நிருபத்துங்க பல்லவனுக்கு ஆதரவு வழங்கிய பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். சோழர்கள் இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிற்காலத்தில் பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவர் நாட்டையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.
கி.பி 907 இல் அரசனான பராந்தக சோழனும், போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். எனினும் பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன், கி.பி 950 இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும், குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். இடையில் சிறிது காலம் ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான். சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்ததுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், இன்னும் அறியப்படாத சதி முயற்சியொன்றின் விளைவாகப் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது சுந்தர சோழனின் வெற்றிகளுக்கு உரிய பயனை அளிக்கவில்லை.

ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தர சோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான். சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.
கி.பி 973 இல் சுந்தர சோழன் இறந்த பின்பு, கண்டராதித்தனின் மகனான உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பிற்காலச் சோழர்கள்

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் மேல் நிலைக்கான போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. கி.பி 850 இல் விஜயாலயன் என்பவன் சோழ மன்னனானான். அவன் அக்கால அரசியல் சூழ்நிலைகளைத் திறமையாகக் கையாண்டு முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். எனினும் அவன் கி.பி 871 இல் இறந்தான். விஜயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். முதலாம் ஆதித்தன் என்று அழைக்கப்படும் இவன் தமிழ் நாட்டு அரசியல் சதுரங்கத்தில் திறமையாகச் செயற்பட்டு சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். இவன் ஆரம்பத்தில் பாண்டியர்களுக்கு எதிராகப் பல்லவர்களுக்கு உதவியாக இருந்தாலும், பல்லவர்களிடையே அதிகாரப் போட்டி தலைதூக்கியபோது, தலையிட்டுத் தனக்குச் சாதகமான அபராஜித பல்லவன் வெற்றிபெற உதவினான். இது தொடர்பாக நடைபெற்ற திருப்புறம்பியப் போர், தமிழ் நாட்டிலும், சோழநாட்டின் எதிர்காலத்திலும் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராஜிதனுக்கு எதிராக நிருபத்துங்க பல்லவனுக்கு ஆதரவு வழங்கிய பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். சோழர்கள் இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பிற்காலத்தில் பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராஜித பல்லவனைக் கொன்று பல்லவர் நாட்டையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.
கி.பி 907 இல் அரசனான பராந்தக சோழனும், போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். எனினும் பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன், கி.பி 950 இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும், குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். இடையில் சிறிது காலம் ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான். சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்ததுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், இன்னும் அறியப்படாத சதி முயற்சியொன்றின் விளைவாகப் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டது சுந்தர சோழனின் வெற்றிகளுக்கு உரிய பயனை அளிக்கவில்லை.

ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தர சோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான். சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.
கி.பி 973 இல் சுந்தர சோழன் இறந்த பின்பு, கண்டராதித்தனின் மகனான உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இராஜராஜ சோழன்

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராஜராஜன் மன்னனானான்.இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிஷிவர்மன் என்று பெயர்கள் வழங்க பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. இவற்றுக்காக இராஜராஜன் நடத்திய போர்கள் பல. பாண்டி நாட்டின் மீதும், சேர நாட்டின் மீதும் போர் தொடுத்து, பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனையும், சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத்தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து மைசூரை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றினான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராஜராஜன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள இலட்சத்தீவு மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.
இன்றைய திரிகோணமலையை அடுத்த கல்வெட்டுகளில் இந்த தமிழ்-பௌத்த மரபு பற்றிய வாசகங்கள் காணப்படுகின்றன. இவை இந்துக் கடவுளர்க்குப் பதிலாக, புத்த பகவானைக் கொண்டு துவங்குகின்றன. புத்த பகவானைத் “தேவன்” என்று குறிப்பிடும் வாசகங்களையும் அங்கே காணமுடியும். ஆக, இந்தத் தமிழ்-பௌத்த மரபினர், இந்து அடிப்படைகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் புத்தபகவானை ஏற்றுக்கொண்டாலும் அரசியல் ரீதியாக சோழ அரசர்களையே அண்டியிருந்தனர். எடுத்துக்காட்டாக, இவர்களுடைய பௌத்த-விகாரையின் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி. ராஜராஜசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விகாரை அக்காலத்தில் இருந்துவந்ததும் குறிப்பிடத்தக்கது.

இராஜேந்திர சோழன்

இராஜராஜனின் மறைவுக்குப்பின், 1012 ஆம் ஆண்டில், அவனது மகனான இராஜேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கெனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராஜேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் சோழநாடு மேலும் விரிவடைந்தது. ஏற்கெனவே பெற்றிருந்த வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அவன் போர்களில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாஸ்கர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.
வடக்கு எல்லையிலும், சாளுக்கியர்களை மீண்டும் அடக்கிவைக்கவேண்டி ஏற்பட்டது. அப்பகுதியில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் தோற்கடித்தது சோழர்படை. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராஜேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
இக்காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது.

பின்வந்த சோழ மன்னர்

இராஜேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் முதலாம் இராதிராஜன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.
இவனைத் தொடர்ந்து, அவன் தம்பியான இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராஜேந்திரன் எனப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராஜேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராஜேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராஜேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராஜேந்திரன் இறந்து போனதால், சாளுக்கிய - சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விஜயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

முதலாம் குலோத்துங்கன்

முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.

சோழப் பேரரசின் வீழ்ச்சி

முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராஜராஜன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராஜேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராஜராஜனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.

அரசன் பெயர் ஆட்சியாண்டுகள் தந்தை தலைநகரம்
விசயாலய சோழன் 848-871 அறியப்படவில்லை தஞ்சாவூர்
ஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்
முதலாம் பராந்தக சோழன் 907-955 ஆதித்த சோழன் தஞ்சாவூர்
கண்டராதித்த சோழன் 950-957 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
அரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்
இரண்டாம் பராந்தக சோழன் 957-970 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்
ஆதித்த கரிகாலன் 957-969 சுந்தர சோழன் காஞ்சிபுரம்
உத்தம சோழன் 973-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்
முதலாம் இராஜராஜ சோழன் 985-1014 சுந்தர சோழன் தஞ்சாவூர்
முதலாம் ராஜேந்திர சோழன் 1012-1044 முதலாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் ராஜாதிராஜ சோழன் 1018-1054 முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராஜேந்திர சோழன் 1051-1063 முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்
வீரராஜேந்திர சோழன் 1063-1070 இரண்டாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
அதிராஜேந்திர சோழன் 1067-1070 வீரராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் குலோத்துங்க சோழன் 1070-1120 முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் கங்கைகொண்ட சோழபுரம்
விக்கிரம சோழன் 1118-1135 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133-1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் ராஜராஜ சோழன் 1146-1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் 1163-1178 இரண்டாம் இராஜராஜ சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178-1218 இரண்டாம் ராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராஜராஜ சோழன் 1216-1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராஜேந்திர சோழன் 1246-1279 மூன்றாம் இராஜராஜ சோழன் கங்கைகொண்ட சோழபுரம்

சோழ நாடு

தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.
உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இவ்விரண்டு பல்லின மக்கள் வாழ்ந்த நகரங்களும், வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விஜயாலயன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்கு அப்பால் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் திருநகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.

முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பை கூறுகிறது.
"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு"

ஆட்சி

இடைக்காலச் சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. சோழர்களின் அரசு முடியாட்சியாகவே என்றும் இருந்து வந்தபோதிலும், சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர் முடியாட்சிக்கும் இடையே நிரம்ப வேறுபாடுகள் இருந்தன. இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்திலும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். தலைநகரமும், பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன. சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது. அரசன், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தான். முறையீடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடைக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்ற விடயங்களில் ஆலோசனைகள் கூறுவதற்காக அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் போல சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின், நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.

அரசுரிமை

அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

உள்ளாட்சிப் பிரிவுகள்

பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள், கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. கூற்றம், நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன.
மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.
குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன.

சமூகநிலை

பெண்டிர்

சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.

உடன்கட்டை ஏறுதல்

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்த சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை.
பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் மூலம் கிடைப்பதால் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகயிருக்கிறது.


ஆடல் மகளிர்

வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே ஆடல் மகள் கவர்ச்சிக் கன்னியராகவே திகழ்ந்தாள். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். ஆடவர்களுடன் இன்முகத்துடன் பழகினாள். ஆனால், சிலருடன் மட்டும் நெருங்கிய நட்புக் கொண்டாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.
அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வுடையவர்களாயும் கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.

அடிமைகள்

சோழர்கள் வேழத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ரொமிலா தபார் (Romila Thapar) என்று முக்கிய வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்தை குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது வேற்றோராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு வணிகம்

சோழர்களின் வெளிநாட்டு வணிக முயற்சிகளின் செல்வாக்கு, சீனா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகள் வரை எட்டியிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் விரிவான கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குக்கரைகள் இரண்டிலும் ஆதிக்கம் பெற்றிருந்த சோழர்கள், இந்த நடவடிக்கைகளில் முன்னணியில் திகழ்ந்தனர். சீனாவின் டாங் வம்சம் (Tang dynasty), சைலேந்திரர்களின் கீழிருந்த, மலாயத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு, பாக்தாத்தின், அப்பாசிட் கலீபகங்கள் (Abbasid Kalifat) என்பன இம்முயற்சிகளில் சோழர்களின் கூட்டாளிகளாக இருந்தன.
சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமாத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்கிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்

சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.
பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டு பல நாடுகளிலும் தாக்கங்களை உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

கலைகள்

சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விஜயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரிய அளவுள்ளவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதனால், இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திரன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் இராஜராஜன் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

சோழர் காலம், வெண்கலச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

கல்வி

சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.
இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.

மொழி

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".

இலக்கியம்

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும். ஆனால் சோழர்களால் தமிழ் உயர் கல்வி கூடங்களில் ஊக்கிவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன.ராஜ ராஜன் காலத்தில்தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஜைன, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.
மூன்றாம்குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். ஜயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கலிங்கத்துப் போரை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலை இயற்றியுள்ளார்.

சமயம்

சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். முற்காலச் சோழராயினும், பிற்காலச் சோழராயினும், பௌத்த, சமண மதங்களின் செல்வாக்கால் கவரப்பட்டவர்கள் அல்லர். எனினும் அவர்கள் ஏனைய சமயத்தவர்கள் தொடர்பில் எம்மதமும் சம்மதம் என்ற போக்கையே கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைஷ்ணவர்பால், சிறப்பாக இராமானுஜர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராஜேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.

சோழர் கலை

சோழர்கட்கு முற்பட்ட காலம்

கி.பி 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களில் சிம்மவிஷ்ணு வம்சம் தோன்றியது முதல், தமிழ்நாட்டில் கலையில் வரலாறு அறுதியிட்டுக் கூறும் முறையில் தொடங்குகிறது. மண்டகப் பட்டில்(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம்) முதல் தடவையாக ஒரு குகைக் கோயிலைக் குடைந்து எடுத்தப் பிறகு, மாமல்லன் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கட்டுக்கடங்கவில்லை. அந்தச் சாதனையை அவன் உடனே கல்வெட்டில் பொறித்தான். செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு ஆகியவை உபயோகிக்காமல், பிரமன், சிவன், விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் எடுத்த பெருமையை, அரிய சாதனையை அவன் அக்கல்வெட்டில் பறை சாற்றுகிறான்.
அவன் காலத்துக்கு முன் கோயில்கள் மரத்தால் கட்டப்பட்டன என்றும், மரங்களை இணைக்க உலோக ஆணிகள் அல்லது வார்ப்பட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்றும் செங்கல்-சுண்ணாம்பு ஆகியவற்றைப் பரப்பி அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன என்று உறுதியாகத் தெரிகிறது. அவற்றில் மரமும் உலோகமும் கூட பயன்பட்டிருக்கலாம். இத்தகைய பழைய கட்டடங்கள் ஒன்றுகூட இப்போது எஞ்சவில்லை; அவையாவும் அழிந்துவிட்டன: அவற்றின் அமைப்புகள், சாயல்கள், இலச்சினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பல்லவர்களின் கட்டடங்கள், தூண்கள், நகரங்கள், அலங்கார வரைபடங்கள் முதலியயாவும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று அதிகப்படியாயும் கற்பனையோடும் புனைப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களின் பேராதரவில் கல் கட்டட நிர்மாணக் கலையும் கல் சிற்ப வேலைப்பாடும் மிக உயர்ந்த நிலைய அடைந்தன. கல்லெல்லாம் கலை வண்ணம் காட்டும் மாமல்லபுரத்தில் எழிலுடன் திகழும் கடற்கரைக் கோயில் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோயில்கள் ஆகிய மூன்றையும் பல்லவர் கலைத் திறனுக்குச் சிகரங்கள் என்று சொல்லலாம்.
பிறகு, பல்லவர் செல்வாக்குக் குறைந்து அவர்களுடைய இறுதி நாட்களில், பொருளாதாரக் கட்டுப்பாடு ஏற்பட்டு சின்னஞ்சிறு கட்டடங்கள் உருவாயின. தென்னிந்திய வெண்கலப் படிமம் ஒன்றுகூட, 'உறுதியாக இது பல்லவர் காலத்தியதே' என்று அறுதியிட்டுச் சொல்லத் தக்கவையாக இல்லை. ஆனால், சோழர் ஆட்சியின் தொடக்கத்திலேயே உலோக வார்ப்புக்கலை உயர்ந்த நிலை அடைந்திருந்தது என்பதால், இந்தக் கலையின் வளர்ச்சி பல்லவர் காலத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

சோழர் கலை

பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். இவ்வாறு சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அங்கே நகர அமைப்புக் கலையின் இடைவிடாத தொடர்ச்சியும், முக்கியமான இடங்களில் அன்று முதல் இன்று வரை தெருக்களின் பெயர்கள் நின்று நிலவுவதையும் காணலாம். மலையிலிருந்து அப்படியே கோயில்களையும் மண்டபங்களையும் குடைந்து எடுக்கிற அரிய கலை, பிற்காலப் பல்லவ ஆட்சியில் கைவிடப் பட்டது. கல்கோயில்களைக் கட்டுவது பெரிது வழக்கமாகப் பரவியது. இந்தப் பழக்கத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்பினார்கள் என்பது சோழர்களுக்குரிய தனிப்பெருமை. ஆரம்பகால சோழர்கள் கட்டிய கட்டடங்களுக்கும், பல்லவ பேரரசு சரிந்து கொண்டிருந்த சமயங்களில், பிற்காலப் பல்லவர்கள் கட்டிய கோயில்களுக்கும் அவ்வளவாக வேற்றுமை கண்டுகொள்ள முடியாது.
பிற்கால நிலை இதனின்றும் முற்றுலும் வேறுபட்டது. சோழ ஆட்சியின் பரப்பும் செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரியவும் பெருகவும் ஆயின. இதற்குத்தக்க அவர்கள் கட்டிய கோயில்களும் நிலப்பரப்பிலும் உயரத்திலும் கலைத்துறையிலும் தனிச்சிறப்புக்களுடன் அமைந்தன. தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரம்மாண்டமானவை; தலை சிறந்தவை; வெளிநாட்டார் கூட வியப்படையும் வண்ணம், தமிழ்நாட்டின் கலைத் திறமையை நிலைநாட்டும் நிறுவனங்கள்; அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு அறிவித்தார்கள்.
சோழர்களுடைய கட்டடத் திறமைக்கும் கலை ஆர்வத்திற்கும் முடிசூட்டியது போல கும்பகோனத்திற்கு அருகே தாராசுரத்திலும் திருபுவனத்திலும் இரு பெரிய கோயில்கள் உள்ளன. சிற்பம், ஓவியம் வெண்கலக் படிகக்கலை ஆகிய துறைகளும், கோயில் கட்டடக் கலையோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின.
தென்னிந்தியக் கட்டடக் கலையைப் பற்றி அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்வதற்கு வித்திட்டவர் ழூவே தூப்ராய்(G. Jouveau-Dubreuil)என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர். அவர் கூறியிருப்பதாவது: "சிற்பக்கலையில் பல்லவர்கள் மேம்பட்ட நிலையை அடைந்தனர்ர். ஏனைய துறைகளை விட கட்டடக்கலையிலேயே சோழர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். எளிமையும் பெரிமையும் கலந்த ஓர் அமைப்பு முறையை அவர்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்டார்கள்." சோழர் கட்டடக்கலை வல்லவர்களை விட, சோழ சிற்பக்கலைஞர் தங்கள் ஆற்றலில் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் பல்லவச் சிற்பக் கலைஞர்கள் கல்லில் காட்டிய ஆற்றலை இவர்களும் காட்டியிருக்கிறார்கள்.
வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில் வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண் ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும் அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

கற்கோயில்கள்

சோழர் ஆட்சி ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

தாராசுவரம் ஐராவதேஸ்வரர் கோயில்

ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.

செப்புப்படிமங்கள்

'செப்புப் படிமங்கள்' என்னும் சொல் எந்தெந்த உலோகங்கள், எந்தெந்த அளவில் சேர்த்து வார்க்கப்பட்டிருப்பினும், பொதுவாக உலோகத் திருவுருவங்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுவதாகும். சோழர் காலத்து உலோகத் த்ருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன.

மனித உருவங்கள்

இந்திய கல் சிற்பக்கலையில், இன்ன உருவம் இன்னாருடையது தான் என்று ஆதாரமாகச் சொல்லக்கூடிய நிலை மிகக்குறைவு. இந்த குறைபாடு சோழர்களின் கல்சிற்பக்கலையிலும் காணலாம். உயிருள்ள ஓர் ஆளைப் பார்த்துக் கல்லிலே வடிக்க விரும்பிய போதும் கூட, உயிருக்கு உயிராகப் பிரதிபலிக்காமல் அந்தப் படைப்பு பழைய சிற்பம் ஒன்றின் படிவமாகி விடுவதும் உண்டு. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் தான் சோழர்களின் கல்சிற்பக்கலை வானோங்கி இருந்ததென்ற கருத்தை மறுக்கும் விதத்தில் ஸ்ரீநிவாசநல்லூரிலும் கும்பகோணத்திலும் உள்ள கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகள் முதலாம் இராஜராஜன் பட்டம் ஏறியதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முந்தியன.
முதலாம் இராஜேந்திரன் காலத்தில் மனித உருவமாகப் படைக்கப்பட்டது என்று தெரிவது காலஹஸ்திக் கோயிலில் உள்ள அழகிய வெண்கலத் திருமேனி மட்டுமே. இது முதாலாம் இராஜராஜனின் அரசியான சோழ மாதேவியைக் குறிப்பது. இந்தத் திருமேனியின் காலமும் இது யாருடையது என்ற அடையாளமும் அதன் அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு வாசகத்தால் தெரிகின்றன. இராஜேந்திரச் சோழனின் உத்தரவுப்படி நிச்சப் பட்டழகன் என்ற வெண்கல வார்ப்புக்கலை வல்லுநனால் செய்யப்பட்டதாக அது குறிப்பிடுகிறது. மனித உருவமாகச் சிறந்து விளங்குவதோடு அழாகீய எடுத்துக்காட்டாக அக்காலத்துக் கலையை விளக்கும் இந்தப் படைப்பு தென்னிந்திய உலோகத் திருமேனிகளுள் காலம் வரையறுக்கப்பட்ட முதல் திருமேனியாகும்.

வண்ண ஓவியம்

சோழர் கலைகளின் ஏனைய பகுதிகளைப் போலவே சோழர்களின் ஓவியக்கலையும் பல்லவ பாண்டியர் வளர்த்த துறையின் தோடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் சுவர்களில் தீட்டப்பட்ட வண்ணச் சித்திரங்களில் அளவு, சிறப்பு ஆகியவற்றை இலக்கியங்களில் ஆதாரமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வண்ணச் சித்திரங்களின் மாதிரிகள் எவையும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் பயிலப்பட்ட வண்ண ஓவியக் கலையின் தன்மையைப் பற்றி அவற்றை உற்றுப் பார்த்து நாமே கருத்தைச் சொல்வதற்கேற்ற சான்றுகள் இல்லை.
கலைப் பொருள்களிலேயே, ஓவியங்கள் தான் மிக மென்மையானவை. காலத்தாலும், இயற்கை சீற்றங்களாலும் மலைகளில், இரசாயனங்களால் உண்டாகும் மாறுதல்களாலும். உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களாஅலும் வண்ண ஓவியங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும். தஞ்சாவூர்போல, பல இடங்களில், முதலில் வரையப்பட்ட அழகான ஓவியங்களின் மீது பிற்காலத்தில் அவற்றைவிடச் சற்று மட்டமான ஓவியங்கள் தீட்டப்ப்பட்டிருக்கின்றன. ஓவிய வரலாற்றில் தொடர்ச்சி வளர்ச்சியில்லாமல் இடைக்காலங்கள் உள்ளன. தவிரவும் சில காலப்பகுதிகள் பற்றி உறுதியான செய்திகள் இல்லை. இந்தக் குறைபாடுகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் ஓவியத்துறையில் தொடர்ந்து ஒரு மரபு நீடித்து வந்திருக்கிறது என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.

சோழர் படை

படை

கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் பெயர்களும் நமக்கு கல்வெட்டுக்களின் மூலம் கிடைத்துள்ளன. இப்படைகளின் இராணுவ வாழ்க்கை முறையைவிட, வீரர்கள் தம் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த பணிகளைப் பற்றித்தான் அதிகமாக அறியக் கிடைக்கிறது.
ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட இப்படைப் பிரிவுகளின் பெயர்களை இராஜராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து அறிஞர் திரு. வெங்கய்யா அவர்கள் சேகரித்திருக்கிறார். இவற்றை இராஜராஜனுக்கு முன்னும் பின்னும் இருந்த பிரிவுகளுடன் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 70 ஆக உயரும். இவை ஒவ்வொன்றின் பெயரும், அப்படைய துவக்கிய காலத்தையும் சூழ்நிலையையும் மக்களுக்கு நினைவூட்டுவதாய் இருந்திருக்கக்கூடும். இதுவரை நாம் அறியாத அரசர்களின் பல விருதுகளே இவற்றின் பெயர்களாயின. உதாரணத்திற்கு பார்த்திப சேகரன், சமரகேசரி, விக்கிரமசிங்கன், தாயதொங்கன், தானதொங்கன், சண்டபராக்கிரமன், இராஜகுஞ்சரயன் போன்ற பெயர்களைச் சொல்லலாம்.
சோழப்படையின் வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு பகுதிகளைப் பற்றியும் இப்பெயர்களிலிருந்தே அறியலாம். "ஆனையாட்கள்" அல்லது "குஞ்சரமல்லர்" என்றும் குறிப்பிடப்பட்ட யானைப்படையைப் பற்றியும் "குதிரைச் சேவகர்" என்று அழைக்கப்பட்ட குதிரைப்படையைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றும் காலாட்படையின் பல பகுதிகள் பற்றியும் குறிப்புகள் கல்வெட்டுக்களின் காணப்படுகின்றன. கைக்கோளாளரைக் கொண்ட பிரிவு "கைக்கோளப் பெறும் படை" என்று அழைக்கப்பட்டது. கைக்கோளர் என்றால் நெசவாளரைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளக்கூடாது. கைப்பலம் பொருந்திய வீரர்களைக் கொண்ட படைப் பிரிவைக் குறிப்பதாக கொள்ளவது பொருத்தமாகயிருக்கும்.
வில்லேந்திய வீரர்கள் "வில்லிகள்" என்றும், வாளேந்திய வீரர்கள் "வாள்பெற்ற கைக்கோளர்கள்" என்றும் குறிக்கப்படுகின்றனர். வலங்கை வகுப்பைச் சேர்ந்த வேளைக்காரர் என்போர் போர் படையில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். இலங்கையில் பொலன்னறுவாவிலிருக்கும் விஜயபாகு மன்னன் கல்வெட்டில் இடங்கை வேளைக்காரர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவ்வேளைக்காரர் என்போர் தேவைப்பட்ட போது தற்காலிகமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(அணி) படைச் சேவகர்கள் என்ற கருத்து உள்ளது ஆனால் இது சரியான ஒன்று இல்லை. மாறாக இவர்கள் நிரந்தரமான நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகர்களாகப் பணிபுரிந்தனர். பெயருக்கேற்ப வேளை வரும்போது இவர்கள் தம் உயிரையும் கொடுத்து அரசனைக் காப்பாற்றினர் என்றுதான் கருதவேண்டும்.
பிற்கால இலக்கியச் சான்றுகள் சில இக்கருத்துக்கு வலிவு தருகின்றன. பிற்காலப் பாண்டிய நாட்டில் பணியாற்றிய "தென்னவன் ஆபத்துதவிகள்" என்போர் இவ்வேளைக்காரரைப் போன்றவரே. இவர்கள் அனைவரும் அரசரின் அருகிலேயே இருந்தனர் என்றும், மிக்க அதிகாரம் பெற்றிருந்தனர் என்றும் மார்க்கோபோலோ குறித்துள்ளார். படைகளுக்குள் சிறுதனம் பெருதனம் என்ற பாகுபாடும் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து தெரியவருகிறது.

 

மூன்று கை மகாசேனையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள திருவாலீசுரத்திலிருக்கும் அரியதொரு கல்வெட்டு அங்கிருந்த மூன்று கை மகாசேனை(மூன்று அங்கங்களைக் கொண்ட பெரும் சேனை)யைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தருகிறது. அக்கல்வெட்டு முதலாம் இராஜராஜன் அல்லது முதலாம் இராஜேந்திரன் காலத்திலோ எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். அக்கல்வெட்டில் காணப்படுபவை.
இவர்கள் விஷ்ணுவையையும் சிவபெருமானையும் வழிபட்டனர். கன்னரதேவனைத் தோற்கடித்துத் துரத்தினர்; காங்கேயனை வென்றனர்; கல்பாடம் என்ற ஊரையும் கடற்கரையிலுள்ள விழிஞத்தையும் அழித்தனர். கடல் கடந்து கிழக்கே சென்று மாதோட்டத்தை அழித்தனர்; மலை நாட்டைக் கைப்பற்றினர்; சாலையிலுள்ள கடற்படையை அறுத்தனர்; வள்ளாளன் என்ற சாளுக்கியரை புறம்காட்டி ஓடச் செய்தனர்; வனவாசி நகரைக் கைப்பற்றினர்; இச்சாதனைகளுக்காக காளஹஸ்தியிலுள்ள தமிழ்ப் புலவர்களால் புகழ்ந்து பாடப் பெற்றனர்; மேலும், குச்சி மலையிலுள்ள கோட்டையை அழித்து உச்சந்தி நகரைப் பிடித்தனர். தங்களை எதிர்த்த வடுகர்களை முறியடித்தனர். வாதாபிக் கோட்டையைத் தகர்த்து அந்நகரையும் கைப்பற்றினர். இம்மகா சேனையினர் பாண்டிய நாட்டில் தங்கியிருந்தனர் என்றும் மூவகையான பெரும் சேனையைச் சார்ந்த அஞ்சாநெஞ்சம் படைத்த வீரர்கள் என்றும் குறிக்கப்படுகின்றனர். திருவாலீசுரம் கோயிலையும் அதைச் சார்ந்த பூசாரி மற்றும் பணியாட்கள் உட்பட அனைத்தையும் இச்சேனையினர் பேணிவந்தனர்.
மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிகள் அனைத்தும் இராஜராஜன், அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் அடைந்த வெற்றிகளாகும். கி.பி. 1096ல் பொறிக்கப்பட்ட சேரன் மாதேவி(சேரமாதேவி) கல்வெட்டு ஒன்றில் இம்மாசேனையினரின் வீரக்கனவுகள் பற்றிக் கூறப்படுகிறது. மற்றொரு கோயிலையும் அதன் சொத்துக்களையும் இம்மான்சேனை தன் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவந்தது என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

சீன அறிஞர்களின் சோழர்படையைப் பற்றிய குறிப்பு

 கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். "இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 6 அல்லது 7 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.

கடற்படை

இராஜேந்திரனின் படை வீரரை ஏற்றிச் சென்ற "எண்ணிலடங்காக் கப்பல்கள்" கடல் கடந்து ஸ்ரீவிஜயத்தையும் அதைச் சார்ந்த தீவுகளையும் கைப்பற்றியது ஒரு திடீர் சாதனை அல்ல; சோழர்கள் கடைபிடித்த திட்டவட்டமான கடற்படைக் கொள்கையின் விளைவேயாகும். சங்க காலத்திலேயே சோழர்கள் கடல் வாணிகத்திற்கு அடிகோலினர். பிறகு பல்லவர் காலத்தில் கப்பல் போக்குவரத்துப் பெருகிய காரணத்தால் தென்னிந்தியாவிற்கும், மலேயா(மலேசியா, சிங்கப்பூர்) இந்தோசீனா போன்ற தீவுகளுக்குமிடையில் வாணிகக்கலைப் பண்பாட்டுறவு மேலும் வளர்ந்தது.
9-ம் நூற்றாண்டில் "மணிக்கிராமம்" என்னும் தென்னிந்திய வர்த்தகக் குழு வங்கக்கடலைக் கடந்து எதிர்க் கடற்கரை ஓரத்தில் இயங்கத் தொடங்கிய செய்தியை அங்குள்ள தகுவாபா என்னுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பண்டைய வழக்கப்படியே சோழர்களும் தங்கள் கடல் ஆதிக்கத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டு பல வெற்றிகளைக் கண்டனர். ஈழம், மாலத்தீவு(Sri Lanka and Maldives) ஆகியவற்றைக் கைப்பற்றியது. சீன வரலாற்றில் குறிக்கப்பெற்றது போல, சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியது. இவையெல்லாம் இம்முயற்சியால் சோழர் கண்ட வெற்றிகளாகும்.
காந்தளூர்ச் சாலை கலமறுத்து, சேரர் படையை முறியடித்துத் தென்னிந்தியக் கடலில் சோழர் தங்கள் நிகரற்ற ஆதிக்கத்தை நிலைநாட்டினர். சோழர் காலத்திய கலங்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நேரடியான சான்றுகள் யாதும் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மூன்று வகைக் கலங்கள் சோழ மண்டலக் கரையில் உலாவின என்று "பெரிப்ளூஸ்" என்னும் நூல் கூறியுள்ளதையும் பிறகு இராஜேந்திரன் பெரியதொரு கப்பற்படையைக் கொண்டு வெற்றிச் சாதனைகள் புரிந்ததையும் நோக்கும் பொழுது, சோழர் கப்பற்படை சிறியதும் பெரியதுமான பல கொண்ட சிறந்த படையாக அமைக்கப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது.


போர் விளைவுகள்

போர் என்பது இருதரப்பிலுமுள்ள படை வீரர்களுக்கிடையே மட்டும் நடந்த சண்டை எனக்கருதவும், நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கவில்லை என்ற ஓர் எண்ணத்திற்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. சோழர் கல்வெட்டுக்களிலிருந்தும் அவர்களுடன் போரிட்ட சாளுக்கியரின் கல்வெட்டுக்களிலிருந்தும் நமக்கு தெரியவருவது, அவர்கள் செய்த கடும் போரினால் துங்கபத்திரை நதியின் இரு பக்கங்களில் இருந்த மக்களிடையே பல தலைமுறைக்குத் தாங்கமுடியாத துயரங்களை அப்போர் உண்டாக்கியது. போரிடும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில உயர்ந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கூட மரந்து, அமைதியாக வாழ்ந்த மக்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர்.
ஈழத்திலும் கருநாடகப் பகுதியிலும் கிடைத்துள்ள சான்றுகளை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சாளுக்கியக் கல்வெட்டுக்கள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. சமய வேறுபாட்டினால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், பொருளாசையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சாளுக்கிய நாட்டில் செல்வச் செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள்(பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவபக்தனான ராஜேந்திரனுக்கு நல்ல வேட்டைக் களமாக அமைந்தன என்று தெரிகிறது. அயல்நாட்டுப் படையெடுப்புக்களிலிருந்து சோழர்களுக்கு கிடைத்த பொருள்கள் ஏராளம். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பொன்னையும் பொருளையும் தான், அரசர்கள் தானமாக வாரிக்கொடுத்தனர் என்று அவர்கள் கல்வெட்டுக்கள் வெளிப்படையாக கூறுகின்றன.
பொதுவாக போர்க்களத்தின் மூலம் கிடைத்த பொருள் எல்லாம் அரசரையே சாரும். அவைகளை தன் விருப்பம் போல் பயன்படுத்தலாம். சீப்புலி பாகி நாடுகளில் கைப்பற்றப்பட்ட தொள்ளாயிரம் ஆடுகளை முதலாம் இராஜராஜன் தமது 6-ம் ஆட்சி ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருக்கும் துர்க்கைக் கோயிலுக்குத் தானமாக அளித்துத் தமது பெயரில் பத்து நந்தா விளக்கேற்றி வைக்கப் பணித்தார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மற்றொரு கல்வெட்டில் மலைநாட்டைக் கைப்பற்றி, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்களில் மரகதத்தேவர் படிமம் ஒன்றை அதிகார் ஒருவர் அரசனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு அதைத் திருப்பழனம் என்னும் ஊரில் கோயில் கொள்ளச் செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழர் காலக் கட்டிடக்கலை

சோழர் காலக் கட்டிடக்கலை என்பது பல்லவர் காலக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாக, சோழர் தமிழ் நாட்டில் வலிமை பெற்றிருந்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் பன்னிரண்டான் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும்.


ஆரம்ப காலம்


சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் அவை அளவிலும் சிறியவையாக உள்ளன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர், கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும், அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

மத்திய காலம்

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இராஜராஜ சோழன் பட்டத்துக்கு வந்தபின்னர் சோழப் பேரரசின் வலிமை ஏறுமுகத்தில் இருந்தது. இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவற்றுள் கி.பி 1003 ஆண்டு தொடங்கப்பட்டு 1010 ல் கட்டிமுடிக்கப்பட்ட தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயில் என்ற அழைக்கப்படும் பிருஹதீஸ்வரர் கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர்காலக் கட்டிடக்கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்படும் இக் கோயில் இந்தியாவில் கட்டப்பட்ட எந்தக் கோயிலிலும் அளவில் பெரியது எனக் கருதப்படுகின்றது. 90 அடி அகலம், 90 அடி நீளமுடைய கருவறைக்கு மேல் 190 அடியும், நிலத்திலிருந்து 210 அடி உயரமுடைய விமானத்தைக் கொண்டது இக் கோயில்.
இதைத் தொடர்ந்து பதினோராம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இராந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்டதே கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள கோயில். இதன் விமானம் 150 அடி உயரமுள்ளது. தான் பெற்ற போர் வெற்றிகளுக்கான சின்னமாகத் தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டது இக் கோயில். கம்பீரமும் ஆண்மைப் பொலிவும் கொண்ட தஞ்சைக் கோயிலுடன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலை ஒப்பிடமுடியாதெனினும், இங்கே அமைந்துள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் சோழப்பேரரசின் உச்சகட்ட வலிமையை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பிற்காலம்

சோழர்கள் கி.பி. 1279 வரை தமிழ் நாட்டில் ஆட்சியிலிருந்தபோதும், கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் பின்னர் முன் குறிப்பிடப்பட்ட இரண்டு கட்டிடங்களுடனும் ஒப்பிடக்கூடிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. கும்பகோணத்திலுள்ள சூரியனார் கோயிலும், தாராசுரத்திலுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலும், கம்பகரேஸ்வரர் கோயிலும் பிற்காலச் சோழர்காலக் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டுகளாகும்.

இலங்கையில் சோழர் ஆட்சி

பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.

ருகுணு மீதான தாக்குதல்

கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.
ஐந்தாம் மகிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து ருகுணுவின் சிங்களப்படையினர் சோழர்படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். சோழர் ருகுணுவைத் தாக்கி ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றியபோது அவனது இளவரசனான காசியப்பன் தப்பித்து ஓடிவிட்டான். ஐந்தாம் மகிந்தனின் மறைவிற்குப் பின்னர் றுகுணுவில் இருந்து ஆரம்பித்த சிங்கள சோழ எதிர்ப்பிற்கு 12 வயது நி்ரம்பிய காசியப்பன் தலைமை வகித்தான்

முதலாம் விக்கிரமபாகு


காசியப்பன் பற்றி அறிந்து கொண்ட இராஜேந்திர சோழன் தனது மகன் இராசாத்தி இராசன் தலைமையில் கி.பி.1041-ல் ஒரு படையை அனுப்பி காசியப்பனை எதிர்த்தான். இந்தப் போரில் காசியப்பன் உயிரிழந்ததுடன் சோழர்படை பெரும் வெற்றி ஈட்டியது . இதேவேளை சூளவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் தகவல்கள் ஆறுமாதம் தொடர்ந்த இந்த யுத்தம் இரண்டு சிங்களத் தளபதிகள் தலைமையில் இடம்பெற்றதாகவும் இந்த யுத்தம் காரணமாக சோழர்கள் படை ருகுணுவில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் காசியப்பன் தனது அரசை ருகுணுவில் அமைத்துக்கொண்டான் எனவும் சூளவம்சம் கூறுகின்றது.
தொடர்ந்து தனது படைப்பலத்தைப் பெருக்கியதுடன் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும் நோக்கிலும் விக்கிரமபாகு ஈடுபட்டான். இதேவேளை சோழருக்கு எதிரான பாண்டியர், சேரருடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டான். இதேவேளை அவ்வப்போது ருகுணு இராச்சியத்தின் மீது சோழர்படைகள் தாக்குதல் நடத்தினாலும் ருகுணுவைக் கைப்பற்றும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.
விக்கிரமபாகுவின் படைபெருக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் நீண்டகாலம் எடுத்து சுமார் எட்டு வருடங்கள் தொடர்ந்தது. ஆயினும் பெருக்கிய படைமூலம் சோழர்மேல் படையெடுக்க முன்னர் விக்கிரமபாகு நோய்வாய்ப்பட்டு தெய்வேந்திர முனையில் மரணமடைந்தான்.

முதலாம் விஜயபாகுவும் சோழர் ஆட்சி வீழ்ச்சியும்

 கி.பி 1070 வரை இலங்கையில் நீடித்த சோழர் ஆட்சி பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியுற ஆரம்பித்தது. முதலாம் விக்கிரமபாகுவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அரசாட்சிக்கான போட்டி ருகுணு இராச்சியத்தில் அரங்கேறியது. இந்த நிலமையை சோழர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து இளவரசர்களில் மூன்று இளவரசர்கள் சோழர்படைகளினால் வெற்றிகரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.
கி.பி 1055 இல் முதலாம் விஜயபாகு எனும் அரசன் பதவியேற்றுக்கொண்டான். பதவி ஏற்ற விஜயபாகு சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலநறுவையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். கி.பி 1066 இல் தனது முதலாவது தாக்குதலை பொலன்னறுவை மேல் நடத்தினான். இதன் போது பொலன்நறுவை நகரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும் சிறிது நாட்களில் தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தில் இருந்து கிடைத்த மேலதிகப் படையுதவிகாரணமாக சோழர் மீளவும் விஜயபாகுவை விரட்டித் தமது தலைநகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
1069-1070 காலப்பகுதியில் சோழ இராச்சியத்தில் உள்நாட்டு யுத்தம் உருவானது. இதன் காரணமாக சோழ அரசிற்கு இலங்கைபற்றி கவலைப்படும் நிலையில் இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய விஜயபாகு தனது இரண்டாவது தாக்குதலைப் பொலன்னறுவை மீது ஏவினான். மூன்று முனைகளில் படைகளை ஏவிய விஜயபாகு மேற்குப் பக்கமாக ஒரு படையணியை அனுப்பி மாந்தை மூலம் சோழர் உதவிப்படை அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயாரானான். அதேவேளை மேற்கு, கிழக்கு பகுதிகளால் இரண்டு படையணிகளையும் நேரடியாக தெற்கிலிருந்து தனது தலைமையில் பிரதான படையணியையும் கொண்டு பொலனறுவையை முற்றுகையிட்டான். சுமார் 17 மாதங்கள் தொடர்ந்த முற்றுகை விஜயபாகுவிற்கு வெற்றியாக அமைந்தது.கி.பி 1070 இல் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு விஜயபாகு இலங்கையின் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.

17 வருடங்கள் தொடர்ந்த இடைவிடாத தாக்குதல் மூலம் சோழர்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியதுடன் இலங்கையை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தான். அண்ணளவாக ஒரு நூற்றண்டு காலத்தின் பின்னர் இலங்கையை ஒரு குடையின் கீழ் சேர்த்த பெருமை இவனைச் சாரும். இவ்வாறு சோழர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது.

முடியாட்சி முறைமையின் குறைகள்

ஒரு அரசனால் ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை மக்களாட்சியுடன் ஒப்பிட்டு வேறுபாடுகாணலாம். முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு.
  • சட்டமியற்றல், நிர்வாகம், நீதிபரிபாலனம் ஆகியவற்றின் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும். அதாவது, அரசனே பொதுவாக மூன்று அம்சங்களையும் கட்டுப்படுத்துபவனாக அமைகின்றான். இது சர்வதிகாரத்துக்கு வழிசமைக்கின்றது.
  • சர்வதிகாரம்
  • மக்கள் அதிகாரம் அற்றோராக இருத்தல்.
  • அரசு கொள்கையடிப்படையில் அமையாமல், அரசனின் விருப்பு/வெறுப்பு திறன்/திறன் இன்மை ஏற்ப அமைய ஏதுவாகின்றது.
  • அரசன் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டியவனாக இருக்கின்றான். அல்லது குறைந்த பட்சம் நல்ல அமைச்சர் மற்றும் பிற துறைசார் திறன்களை தேடிக்கொள்ள வேண்டியவனாக இருக்கின்றான். இது தனிமனிதனுக்கு பாரிய ஒரு சுமை.
  • கருத்து வேறுபாட்டுக்கு இடமின்மை. எப்படிப்பட்ட நல்லாட்சி மன்னன் ஆட்சியிலும் அவனது ஆட்சிக்கு எதிராக கருத்துவேறுபாடுகள் இருக்கவே செய்யும். எதிரான கருத்துக்களுடன் ஒத்து அல்லது ஏற்றுப்போகவேண்டும், இல்லாவிட்டால் அதை வன்முறையால் அடக்கவேண்டும்.
  • பிறப்பு-சாதியை வலியுறுத்தும். பொதுவாக முடியாட்சி ஆட்சி மகன்வழியாகவே உரிமை கொள்ளப்படுகின்றது. தனது இருப்பை பிறப்பு வழியால் நியாயப்படுத்தும் ஒரு முறை பிறப்பு வழிச் சாதிய முறையையும் நியாப்படுத்தும்.
  • சமூக வர்க்க அசைவியக்கம் மட்டுப்படுதல்.
  • உரிமைப் போர்கள்: முடியாட்சி ஆட்சிமுறையில் அண்ணன் தம்பி, பலமனைவிமார் மகன்கள் என ஆட்சிபீட உரிமைக் கோரிக்கைக்காக நாட்டை போருக்கு இட்டுசெல்வதை வரலாற்றில் காணலாம். தனிமனித அல்லது குடும்பப் பிரச்சினைகள் ஒரு நாட்டின் பிரச்சினையாக்கப்பட்டு போருக்கு காரணமாகின்றன.
  • வர்க்க இடைவெளி: அரசனுக்கும் மக்களுக்கும் பொருளாதார இடைவெளி பெரிதென்பதால், மக்களுடைய வாழ்வியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தருவதிலோ, மக்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவதிலோ அரசன் திறனுடன் இயங்குவதற்கு தடையாக இருக்கும்.
  • திறன் இன்மை: பிறப்பால் அரசுரிமை பெற்ற ஒரு அரசன் அரசை வழிநடத்துக்குரிய திறனை தன்னகத்தே இயல்பாக கொண்டிருப்பான் என எதிர்பார்க்க முடியாது.
  • ஒரு மிகத்திறன் படைத்த கொண்ட அரசன் அரசு அமைத்தாலும், அப்படிப்பட்ட ஒரு அரசன் அவனை பின் தொடர்பது முடியாமல் போகும்போது, நாடு சீரழிந்து போகின்றது.
  • பிற திறன்படைத்தவர்கள் அரசாட்சி செய்வதற்கு வழியின்மை.
  • வரலாற்றில் அரசன் ஆடம்பரமான சாதாரண மக்களோடு ஒப்பீடு செய்யமுடியாத வாழ்வுநிலையைக் கொண்டிருந்தையே முடியாட்சி முறையில் காணலாம்.

புறநானூற்றில் அரசனின் அதிகார கட்டமைப்பு

  • "புறநானூற்றுப் பாடல்களில் ஒரு தனிமனிதனின் அதிகாரம், "மன்னன்" என்ற தளத்தில் நேரடியாகக் கட்டப்படுவதை எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாம். மன்னன் எதிரிநாட்டு மக்கள்குப் பயங்கரமானவன்; எதிர்நாட்டை தீயிட்டுக் கொளுத்துபவன், எதிரிநாட்டுப் பெண்களுக்கு அச்சம் தரத்தக்கவன்;...சிதைத்தலில் வல்ல நெடுந்தகை அவன். இப்படி உடல் சார்ந்து வேற்றுநாட்டின் மேல் அதிகாரத்தை காட்டும் மன்னன் செயல்கள் புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றில் பரக்கக் காணலாம். இது வெளிப்படையான செயல்பாடு. ஆனால் தன் ஆளுகைக்கு உட்பட்ட தன்நாட்டு மக்களின் மனத்தில், அவர்கள் அறியாமலேயே, தன் அதிகாரத்தை அவர்கள் தானே முன்வந்து இயல்பாக ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு மனவியலைக் கட்டமைக்கிற சொல்லாடல்தான் அதிகார அரசியலின் உச்சகட்ட தந்திரமாக படுகின்றது." 
  • "மன்னன் - புலவர் உறவில் பளிச்செனப் படுவது ஒருவர் வள்ளல்; ஒருவர் இரவலர் என்று கட்டப்பட்டுள்ள முரண்தான். எப்பொழுதுமே அதிகாரம் தன்னைவிட எளிய உருவகங்களை உருவாக்கி, அவைகள் தன்னை சார்ந்து வாழும்படியான ஒரு அமைப்பை வடிமைத்து கொள்ளும்."
  • "புலவர் கடிந்துகொள்ளும் போதும் அதிகாரத்திற்கு எதிரான குரல் ஒலிப்பது போலத் தோன்றிலாலும், இத்தகைய சொல்லாடல்களிலும் உள்ளுறைந்து வினைபுரிவது மன்னனின் அதிகாரக்கட்டமைப்புச் செயல்பாடுதான். தன்னை விமர்சிக்கிற குரலையும் உள்வாங்கி, தன்னைத் திருத்தி வளர்தெடுத்துக் கொள்ளும் மாமனிதன் என்ற கட்டுமானமே இத்தகையே சொல்லாடல் மூலம் மனத்தில் பதிவாகின்றது." 
  • "தாயை தியாகம் செய்யும்படியாகவும், அரசின் அதிகாரத்துக்கு ஏற்ப மகனை வளர்த்துக் கொடுக்கும்படியாகவும் தாயின் மனோபாவத்தை வடிவமைக்கின்றது." 

 சோழர் இலக்கியங்கள்

 

சோழர் இலக்கியங்கள் என விளிக்கப்படுவது தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலபகுதியிலே எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு,கலகம்,குழப்பம் எதுமற்ற நிலமையும்,சைவம்,வைணவம் பக்தி இயக்கங்களின் எழுச்சியும்,சோழமன்னர்கள் கலை,இலக்கியங்கள் மீதான விருப்பும்,புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று.சாளுக்கிய சோழர்கள்ளுடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை,இலக்கியங்களின் பொற்காலம் என சரித்திர ஆய்வாளர்கள விதந்து குறிப்பிடுவர். ஒரு சில இலக்கிய பிரதிகள் தவிர சோழர்கால இலக்கியங்கள் பலதும் தற்போதும் அழியாது கிடைக்கப்பெற்றுள்ளன.சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள பற்றிய விபரங்கள் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.
இக் காலகட்டத்தில் எழுதப்பெற்றவற்றை பக்தி இலக்கியங்கள்,தமிழ் இலக்கணங்கள்,அரசர் புகழ்பாடும் துதி இலக்கியங்கள் என வகைப்பிரிக்கலாம்.

சங்க காலமும் அதன் தொடர்ச்சியும்

ஏனைய துறைகள் பலவற்றைப் போலவே, இலக்கியத் துறையிலும் சோழப்பேரரசர்களின் காலமே, தென்னிந்திய சரித்திரத்தில் ஆக்கத்திற்கு உரிய காலப்பகுதியாகச் சிறந்து விளங்குகிறது. சங்க காலத்தில், சோழ வம்சத்து(அரசர்களும்) இளவரசர்களும் கவஞர்களைப் போற்றும் புரவலர்களாகவும் சில சமயம் தாங்களே புலவர்கள் அல்லது நூலாசிரியர்களாகவும் விளங்கினர்; சங்க காலம், இலக்கியத் துறையில் ஏற்றம் பெற்று விளங்கியது. அதன் பிறகு, அடுத்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பல்லவர்கள், பாண்டியர்கள் ஆதரவில், பாதுகாப்பில், இலக்கியமும் கலைகளும் இருந்து வந்தன.
இந்தக் காலத்தில் தமிழ் இலக்கியமும் சமஸ்கிருத இலக்கியமும் விரிவான வளர்ச்சியடைந்தன. குறிப்பாக்க புத்த சமயத் துறவிகள், இக்காலத்தில் பாலி மொழியிலும் சில நூல்களை உருவாக்கினர். தேவாரம், திருவாசகம் தமிழ் வைணவர்களுடைய நாலாயிர திவ்ய பிரபந்தந்தத்தின் பெரும்பகுதி ஆகியவை இக்காலத்தில் தோன்றியவையே என்பதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை பாண்டிக்கோவை, சூளாமணி, நந்திக் கலம்பகம், பெருந்தேவனாரின் பாரத வெண்பா ஆகியவையும் இதே காலத்தைச் சேர்ந்தவையே. சமஸ்கிருத இலக்கியத்தில் புகழுடன் விளங்குபவர்களான குமாரலரும் சங்கரரும் இக்காலத்தவரே.

சோழப் பேரரசு விரிவடைந்ததின் விளைவு

சோழர் கை ஓங்கியதிலிருந்தே, இலக்கியம் பல வடிவங்களில் பெருகியது. தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஒரு பேரரசு ஏற்பட்டது என்பதையொட்டி, உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் எதிரொலி இலக்கியங்களில் பிரதிபலிக்கலாயிற்று. சோழப்பேரரசு தோன்றியது என்பது புதிதாக ஏற்பட்ட அரசியல் உண்மை ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் புதிய இலக்கிய படைப்புக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. 

கல்வெட்டுக்களில் இலக்கியம்

சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் அலங்காரமான மெய்க்கீர்த்தி(பிரசஸ்தி) வாசகங்களையும் கவிதைகளையும் அவற்றின் வீறு நடையையும், முன்காலத்திய கல்வெட்டுக்களின் உப்பு சப்பில்லாத வாசகத்துடன் ஒப்பிட்டால் எவ்வாறு சோழப் பேரரசு தோன்றியதன் பயனால் புதிய இலக்கிய படைப்புக்கள் தோன்றியது என்ற கேள்விக்கு, தெளிவான விடை கிடைக்கும். படித்தவர்களின் மொழி அல்லது புலமை மொழியான சமஸ்கிருதத்தைக் காட்டிலும், மக்கள் பேசிய மொழியான தமிழ் தெளிவாக நாம் காணுமாறு இந்த வேற்றுமை உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்திலிருந்து சோழ அரசர்களின் மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக, அக்காலத்து இலக்கியத்துக்குச் சிறந்த சான்றாக, எடுத்துக்காட்டாக வகைப்படுத்திச் சொல்லலாம்.
அவற்றின் ராஜ கம்பீரமான வசகம், செய்யுள்களின் ஆற்றொழுக்குப் போன்ற நட வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்புடன் தொகுத்துச் சொல்லும் பாங்கும் போக்கும் அவற்றுக்குத் தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தைத் தருகின்றன. பேரரசர்களின் பிரசஸ்திகள் தவிர, கல்வெட்டுக்களில் எத்தனையோ இலக்கிய வகைகல் உள்ளன. சிதம்பர, திருஆரூர்க் கல்வெட்டுக்கள், இவ்வகையில் உதாரணங்கள். இவை முதலாம் குலோத்துங்க சோழனிடமும் விக்ரம சோழனிடமும் அதிகாரியாக இருந்து பெரும் புகழுடன் விளங்கிய நரலோக வீரனின் வரலாற்றையும் சாதனைகளையும் கூறுவன. அட்டி, வயலூர்(வைலூர்), விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காடவர்களின் பிரசஸ்திகளும் குறிப்பிடத்தக்கன.
இவை அனைத்திலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பல செய்யுள் வகைகளும் திறமையாக ஆளப் பெற்றிருக்கின்றன. தமிழ் யாப்பிலக்கண விதிகள் கரடுமுரடானவையாக இருந்த பொழுதிலும் அவையும் நயமுறக் கையாளப் பெற்றிருக்கின்றன. ஆசிரியர்கள், விளங்காத சொற்களையும் செயற்கையான வாக்கியப் போக்கையும் தவிர்த்திருக்கிறார்கள். வருணனைப் பாடல்கள் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள், பேரரசுகளின் பிரசஸ்திகளில் மிகச் சிறந்து விளங்குகின்றன. எனவெ, இந்தக் கவிதைகளைப் புலமை நிறைந்த அவைக்களக் கவிஞர்கள் இயற்றினார்கள் என்பதற்கும் அவர்களை அடிக்கடி நன்கு பயன்படுத்திப் போற்றி, ஊக்குவித்து வந்ததால் அக்காலத்தில் சமயச் சார்பற்ற இலக்கியம் ஏற்றம் பெற்றது என்பதற்கும் சிறிதளவும் சந்தேகம் கிடையாது.

அழிந்த பாடல்கள்

கல்வெட்டுக்களில் சில நூல்களின் பெயர்கள் தற்செயலாக சொல்லப் பெற்றிருக்கின்றன. மற்றபடி இவை பற்றி ஒன்றும் தெரியவில்லை; ஒரு காலத்தில் அந்த நூல்கள் போற்றப்பட்ட போதிலும், நமக்கு இப்போது அந்த நூல்கள் கிடைக்காததால், அந்த நூல்களுக்கு இருந்த பெருமை அவற்றின் இலக்கியச் சிறப்பாலா அல்லது ஆற்றை எழுதியவர் உள்ளூர்க்காரர் என்ற பற்றுதலாலா அல்லது நூலாசிரியரின் தனிப்பட்ட செல்வாக்காலா என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இந்த நூல்களின் பெயரிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும் இவை சொல்லப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களிலிருந்தும் மக்களுக்கு இவற்றில் ஆர்வம் இருந்ததென்றும் இவ்வகை இலக்கியங்களை அக்காலத்தார் விரும்பி வரவேற்றார்கள் என்றும் தெரிகிறது. சோழப் பரம்பரையில் ஈடும் இணையும் இல்லாதவன் முதலாம் இராஜராஜன். இந்த ஒப்பற்ற சக்கரவர்த்தியைப் பற்றி ஒரு நாடகமும் ஒரு காவியமும் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் பெயர் இராஜராஜஸ்வர நாடகம், இராஜராஜ விஜயம்.
முதலில் சொல்லிய நூல், தஞ்சைப் பெரியகோயிலில் திருவிழாக்களில் நடிப்பதற்காக எழுதப் பெற்றது. இரண்டாவது நூல், திருப்பூந்திருத்திக் கோயிலில் படிப்பதற்காக ஆக்கப் பெறது. இவற்றை நடிப்பதற்கும் படிப்பதற்குமாக அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தனவையா சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தனவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாடகம் இராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடக நூலாக இருந்திராது. சைவச் சமயத்தாரிடம் வழிவழியாக வழங்கி வருகிற ஒரு சில கதைகளைப் பரப்புவதோடு நிற்காமல் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பெருமையையே சுவையுடன் தெரிவிப்பதற்காக, நாடக பாணியில் இதை எழுதியிருக்க வேண்டும்.

பெருங்கதை

பெருங்கதை அல்லது உதயணன் கதை என்பது பிரஹத் கதையின் தமிழ்வடிவம். இது ஒரு முக்கியமான நூல், கொங்கு நாட்டைச் சேர்ந்த சிற்றரசரனான கொங்கு வேளிர் என்ற புலவர் இதை எழுதியிருக்கிறார். பாண்டிய-பல்லவர் காலத்தின் இறுதியில் இது உருவாகியிருக்கலாம். கொங்கு வேளிரின் வாழ்க்கையைப் பற்றிய விவரமான செய்திகள் அவ்வளவாகத் தெரியவில்லை. இரண்டாம் சங்க காலத்தில் பல நூல்களைப் படித்து 'உதயணன் கதை' எழுதப்பட்டதாக சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததொரு உரை எழுதியுள்ள அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூல் கி.பி. 3ம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ எழுதப்பட்டிருக்கலாமென்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இது முடிந்த முடிவு அல்ல. அடியார்க்கு நல்லார் வாழ்ந்த கி.பி. 12-ம் நூற்றாண்டில், 'உதயணன் கதை'யைப் பற்றிய இந்த நம்பிக்கை நிலவியது என்று சொல்லலாம். இந்த நூலில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு மிகச் சிறந்த பதிப்பைத் தந்துள்ளார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். வருணனைக் கவிதைகளுக்கு ஏற்றதான அகவற்பாவில் இந்த நூல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியருடைய நடை கூர்மையாயும்(திட்பமாயும்) தெளிவாயும் இருக்கிறது. தமிழ் இலக்கிய உலகம், இந்த நூலை சிறந்ததொரு காப்பியமாக மதித்து வருகிறது.

சிந்தாமணி

திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மஹாகாவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898-ல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை.
நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருஆலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.

வளையாபதியும் குண்டலகேசியும்

ஐம்பெரும் காப்பியங்கள் என்பவற்றுள் வளையாபதியும், குண்டலகேசியும் அடங்கும். இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. வேறு சில நூல்களில், இவற்றின் சில சில பகுதிகள் மட்டுமே காணப்படுகின்றன. இவையும் ஏறத்தாழ சீவக சிந்தாமணியின் காலத்தில் செய்யப்பட்டவையே. பௌத்த மதத்தார்த் தமிழுக்கு வழங்கியுள்ள இலக்கியச் செல்வங்கள் மிகக்குறைவு. அவற்றுள் ஒன்ரு குண்டலகேசி. புகழ்பெற்ற மணிமேகலை என்னும் நூலும் பௌத்தர்களால் படைக்கப்பட்டதே.

கல்லாடம்

கல்லாடனார் இயற்றியது கல்லாடம் என்னும் கவிதை நூல், ஓர் ஊரின் பெயரை வைத்து நூலுக்கும் நூலாசிரியருக்கும் பெயர் இடம் பெற்றிருக்கின்றன. கல்லாடர் என்ற பெயரில் சங்க காலப் புலவர் ஒருவரும் இருந்திருக்கிறார்; அவருடைய பாடல்களாக, புறநானூற்றில் ஐந்து செய்யுள்களும் அகநானூற்றிலும் குறுந்தோகையிலும் பல செய்யுள்கள் காணப்படுகிறன. கல்லாடத்தின் ஆசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையைத் தன் நூலுக்கு அடிப்படையாகக் கொண்டார் என்றும் செவிவழிச் செய்திஉள்ளது; இது நம்பத்தகுந்ததே.[5] மரபுக்கு மாறுபட்டும் செயற்கை நடையிலும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. சங்க காலக் கவிதைப் பாணியையும் சொல்லமைப்பு முறையையும் இவர் கொண்டிருக்கிறார்.
கர்வம் அல்லது புலமைச் செருக்கு உடைய ஒருவரின் படைப்பு என்பது இந்நூலை மேற்போக்காகப் பார்த்தாலும் தெரியவரும். இதிலுள்ள நூறு செய்யுள்கள் ஒவ்வொன்றும் அகத்துறையில் ஒரு இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவன. கோவை என்னும் பிரபந்த வகையில் வரும் காதல் கவிதைகளை உயிரோட்டமின்றி, கல்லாடத்தில் காணலாம். திருக்கோவையிலிருந்து செய்யுள்களைத் தொகுத்து முன்மாதிரியாக வைத்து, நூலாசிரியர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டார். மேலும் தான் வாழ்ந்த காலத்திற்குப் பொருத்தமில்லாத மொழிமரபைப் பின்பற்ற வேண்டுமென்று வலிய முயன்று அதில் தோல்வி கண்டுள்ளார். ஒரு பரிகாசமான நூலாகவோ கேலிச்சித்திரமாகவோ அவர் இதை எழுதவில்லை.
திருக்கோவை சிறப்பை கல்லாடர் கூறிய விளக்கங்களுக்குப் பின்னரே, சங்க காலப் புலவர்கள் ஒப்புக்கொண்டதாக ஒரு வதந்தி உண்டு. இந்த நூல் ஆடம்பரமான நடையில் அமைந்தது ஆகையால் 'கல்லாடம் கற்றவனோடு மல்லாடதே' என்று ஒரு பழமொழி உண்டு. அண்மைக் காலங்களில் கூட சில அறிஞர்களும் புலவர்களும் இந்நூலைப் பெரிதும் மதித்து வருகிறார்கள். மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களைக் கல்லாடர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். மாணிக்கவாசகர், தருமி, இடைக்காடர் முதலிய பலருக்காக சிவபெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்களைக் கல்லாடர் எடுத்துக் கூறுகிறார்.

கலிங்கத்துப் பரணி

முதல் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியில் அரசவை கவிஞரான ஜெயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியைப் பாடினார். நமக்குக் கிடைத்துள்ள பரணிகளுள் இதுவே காலத்தால் முந்தியதும் சிறப்புமிக்கதும் ஆகும். 'பரணிக்கு ஒரு ஜெயங்கொண்டான்' என்ற பழமொழியிலிருந்து இந்நூலின் அருமையும் பெருமையையும் உணரலாம். எது வரலாறு, எது கட்டுக்கதை எது கற்பனை என்று வாசகர்களுக்குத் தெரியுமாறு எழுதியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்புக்களுள் ஒன்று. ஆசிரியரின் சொல் வளமும், பலவகைச் செய்யுள்களை ஒருங்கே இணைக்கும் திறமும் அவற்றுடன் நிகழ்ச்சிக்களைப் பின்னிப் பிணைக்கும் ஆற்றலும் குறிப்பிடத்தக்கவை. பரணி என்பது போர் பற்றியது; போரின் விவரங்களையும் சூழல்களையும் மட்டுமின்றிப் போர்க்களத்து நிகழ்ச்சிகளையும் சோகம், விரம் முதலிய சுவைகள் தோன்ற எடுத்துரைப்பது.
குலோத்துங்கனின் கலிங்கப் போரைப் பிண்ணனியாகக் கொண்ட பல்வேறு இலக்கியங்கள் தோன்றியதாகத் தெரிகிறது. வீரசோழியம் உரை, தண்டியலங்காரம் உரை ஆகியாவ்ற்றில் ஒரு சில செய்யுள்கள் மட்டுமே கிடைக்கின்றன; கலிங்கத்துப் போர் பற்றிய ஏனைய பல செய்யுள்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை இனி நமக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. கலிங்கத்துப் பரணி அழியாது கிடைத்திருக்கிற்றது எனினும், அதன் மிக உன்னதமான இலக்கியத்தரமே அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சிறந்த நூல், மட்டமான ஏனைய நூல்களை அழித்துவிடும் என்பதற்கு, இந்திய இலக்கியங்களில் வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. ஜெயங்கொண்டாரைப் பார்த்து எழுதியவர்கள் பலர்; ஆனால், பிற்காலப் புலவர்களில் எவரையும் ஜெயங்கொண்டானுக்குச் சமமானவர்கள் என்றோ அவருடன் போட்டியிடக் கூடியவர்கள் என்றோ சொல்வதற்கில்லை.

கூத்தன்

கூத்தன் என்பது ஓட்டக்கூத்தனின் சுருக்கமான பெயர். இவர் செங்குந்தர் மரபினர். அம்மரபினர் போர்ப்படையில் சாதாரணப் பட்டாளத்துக்காரன் முதல் படைத்தலைவன் வரை பல வேலைகளில், மற்றும் நெசவுத் துறையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தகப்பனுமான சங்கரன் என்பவனிடம் ஊழியம் செய்து வந்தார். சங்கரனிடம் வீட்டு ஏவல்களைச் செய்வதை விட வேறு பெரிய பதவிக்கு உரிய தகுதிகள் ஒட்டக்கூத்தனுக்கு இருப்பதை ஒரு காங்கேயன் உணர்ந்தான்; தன் பெருமையை அறிந்து அந்த வள்ளலுக்கு நன்றி கூறத்தான், கூத்தன் ஒரு 'நாலாயிரக்கோவை' பாடினர்.
கூத்தனின் புகழைக் கேள்விப்பட்ட மூன்று சோழப் பேரரசர்கள் அவரை அரண்மனைப் புலவனாக்கிக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் ஒரு உலாவைப் பாடினார். ஒரு பரணி பாடி, விக்கிரமச் சோழனின் கலிங்கப் போர் வெற்றியைச் சிறப்பித்தார். இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடினார். இந்தப் பிள்ளைத் தமிழே ஒட்டக்கூத்தனின் படைப்புக்களிலெல்லாம் சீரும் சிறப்பும் உடையது. காரணம் - சொல்வளம், செய்யுள்களின் ஓசை நயம், அழகான உருவகத் திறமை வாய்ந்தமையாகும். ஈட்டி எழுபது, எழுப் பெழுவது, தக்கயாகப் பரணி ஆகியவற்றைக் கூத்தன் எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன.


கம்பன்

கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். தமிழ் இலக்கியத்தில் எங்குமே ஒப்பிட்டுக் காட்ட முடியாதபடி, ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம காதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.

புகழேந்தி

புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகக் கூறுவது வழக்கம். பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், அவன் மீது பொறாமை கொண்டான். கூத்தனுக்கு புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை.
மேலும் செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாகயிருக்கவேண்டும். ஆனால் இது சந்தேகத்திற்குரியது. புகழேந்தி கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்ததாகக் கொள்ளலாம். புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர். நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் கையாண்டால், வெண்பா சிறந்த பலன் தரும்.
புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது, இலக்கியச் சிறப்பில்லாத பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபு உண்டாயிற்று. ஆனால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறிதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.
மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்.

குந்தவை

குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.

கல்வெட்டு ஆதாரங்கள்

இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது.
இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிரது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களை கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார்.
அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலை திருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
 

புதினங்கள்

 கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள் மொழி வர்மனின் தமக்கையுமான குந்தவை மிக முக்கியமான பாத்திரமாக இருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இவர் கதையின் நாயகனான வந்தியதேவனின் காதலியாக படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார்.