Tuesday 14 February 2012

இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.


பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.


ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.



நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.


என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.





அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.


ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.


நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.


வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.



நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.



நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.


உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.


‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.


அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.


ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.


இது இருதயத்திற்கு ஆகாதே.



நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.


ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.


இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.



நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.


உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.


ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.



உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.


உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.


"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.


மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.


இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?


‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.


மழை வந்தது.

நின்று விட்டேன்.


என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.


ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?


இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

Tuesday 7 February 2012

உருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது !!

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்

மஞ்சள்

இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

கொத்தமல்லி

உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.

கறிவேப்பிலை

உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு

கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுகு எண்ணெய்

சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.


முட்டைக்கோஸ்

உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

தேன்

உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.

மோர்
உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.

சிறு தானியங்கள்

நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.

பட்டை, கிராம்பு

கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.



Friday 3 February 2012

முத்தமிட்ட கணத்தில்

நீ

முத்தமிட்ட கணத்தில்

முளைத்த மன நடுக்கத்தில்

சூரியன் ஒளிய

காற்று உறைய

இதயம் மட்டும்

புவியீர்ப்பு விசையைப்

புறக்கணித்துப் பறந்தது.




இன்னோர் முத்தமிடு

நான்

இறங்கி வர வேண்டும்.

தோழி


தோழி

அன்புக்கு இன்னொரு தாய்

கண்டிக்க இன்னொரு தந்தை

சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்

வழி காட்டும் இன்னொரு ஆசான்

வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி

முகம் புதைக்க வந்த தலையணை

வருடி செல்லும் இன்னொரு தென்றல்


நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்

விமர்சிக்க ஒரு விமர்சகன்

என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி

என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி

என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி

என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி

நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்

எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்

நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை

என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்

என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை

நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்

நான் வாழ இன்னுமோர் உறைவிடம்

எனக்காக அழும் இன்னொரு வானம்

எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்

என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி

எனக்காக மட்டும் இறைவம் படைத்த


இன்னொரு உலகமே என் தோழி

கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!

நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா... இல்லையா...' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை, அனைவரையும் கவர்ந்தது.

மேலும் கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்டனர்.

அந்தக் கதை:

"ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.

இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார்.

உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார்.

'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார்.

உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்...

'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...

'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.

உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார்.

'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.

'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட்.

ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!

உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார்.

'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க.

அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார். அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.

அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.

'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.

'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க.

'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார்.

இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்... சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...

ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல்.

இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள் வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

படைப்பாளி கஷ்டப்படக் கூடாது!

எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.

இரவு நேர கார் பயணம்: முட்டை ரூபத்தில் வரும் பேராபத்து

இரவு நேரத்தில் காரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்வதற்கும், விரும்பதகாத சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் புதிய யுக்தி ஒன்றை சமூக விரோதிகள் கையாள்வது குறித்து செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் செல்லும் கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) மீது முட்டையை வீசி எறிந்து காரை நிறுத்தி அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.

எனவே, இரவில் காரில் செல்லும்போது காரின் முன்பக்க கண்ணாடி மீது முட்டை வீசினால் உடனடியாக காரை விட்டு இறங்கி சோதனை செய்ய வேண்டாம்.

மேலும், காரின் கண்ணாடியை துடைப்பதற்காக நீரை பீய்ச்சியடித்து, வைப்பரை ஆன் செய்து சுத்தம் செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில், முட்டையுடன் நீர் சேரும்போது பிசின் போன்று ஆகிவிடும். அப்போது வைப்பரை ஆன் செய்தால் கார் கண்ணாடி முழுவதும் பனிப்படர்ந்தது போன்று முட்டை படிந்து விடும்.

இதனால், சாலை பார்த்து தொடர்ந்து காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த சந்தர்ப்பத்தைத்தான் சமூக விரோதிகள் பயன்படுத்தி வழிப்பறி மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

எனவே, இரவு நேரத்தில் காரில் செல்லும்போது மர்மநபர்கள் கார் கண்ணாடி மீது முட்டையை வீசி எறிந்தால், உஷாரடைந்து அங்கிருந்து பாதுகாப்பானை இடத்துக்கு காரை ஓட்டி செல்வதுதான் சிறந்தது.

Tuesday 24 January 2012

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அதிக சந்தோசம் அதிக கவலை

பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி

விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எளிமையான எதிர்பார்ப்பு

கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தான உணவு அவசியம்

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம் உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம்.

நட்பான சூழல் அவசியம்

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

நோய்கள் தரும் மன அழுத்தம்

குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.

Friday 20 January 2012

உங்களுக்காக சில மணித்துளிகள் ...!

அதிகாலையில் எழுந்து பரபரப்பாக அலுவலகம் செல்லும் நகர வாழ்க்கையில் தினம் தினம் ஒரே மாதிரி செய்வது போராடித்து விடும். இதனால் உடலும், மனமும், சோம்பிவிடும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற அன்றாடம் செய்யும் அலுவல்களை சற்றே மாற்றி செய்ய வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இது நமது வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது என்கின்றனர்.

ஜூஸ்க்கு வெல்கம், காபிக்கு பை

நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகாலையில் எழுந்து காபி குடிப்பது தினசரி பழக்கமாகிவிட்டது. தினம் தினம் காலையில் எழுந்து காபி குடிப்பது போரடிப்பதோடு உடல் நலத்திற்கும் உகந்ததல்ல எனவே காபிக்கு பதிலாக ஜூஸ் குடிப்பது நல்லது என்கின்றனர். இதனால் உற்சாகத்தோடு உடலும் நலமாகும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எழுதுங்கள் நல்லது

கணினி மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் பேனா பிடித்து எழுதுவது என்பதே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. வீட்டிலும், அலுவகத்திலும் எழுதுவது என்பது மாறி, டைப் செய்வதே அவசியம் என்றாகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்திற்கு பேனா பிடித்து நோட்டு புத்தகங்களில் எழுதி பார்ப்பது நல்லது. ஒவியராக இருந்தால் அழகான ஓவியம் ஒன்றை வரைவது மனதிற்கு மாற்றத்தை தரும். தினசரி போரான வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

பிறந்தநாளுக்கு ஒரு மரம்

ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு மரம் நடுவதை திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். இது நமது வாழ்க்கைமுறையையில் நல்ல தொரு மாற்றத்தை ஏற்படுத்தும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை தருவதோடு மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மரம் வளர்ப்பது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.

மனதிற்கு இதமான பயணம்

வாரம் ஒருமுறையாவது காரை விடுத்து பேருந்தில் பயணம் செய்யலாம். தனியாக சென்று பழகிய நமக்கு சக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணிப்பது மகிழ்ச்சியான மாற்றத்தை தரும். இதனால் பெட்ரோல் மிச்சப்படுவதோடு சுற்றுச்சுசூழலுக்கும் நன்மை செய்தது போலாகும்.

நமக்காக ஒருநாள்

தினம் 24 மணி நேரத்தையும், அலுவலகம், வாழ்க்கைத்துணை, கேர்ள்பிரண்ட், குடும்பம், செல்லப்பிராணிகள் என அனைவருக்காகவும் நேரத்தை செலவழிக்கிறோம். நமக்காக என்று சிலமணித் துளிகள் கூட செலவழிப்பது கிடையாது. எனவே நம்முடைய மனதை புத்துணர்ச்சியாக்க நமக்காக சில நிமிடங்களை தினசரி செலவழிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

ஞாயிறை வீணாக்க வேண்டாம்

விடுமுறை நாளான ஞாயிறு என்பது வீணாக்க அல்ல. எந்த ஒரு இடையூறும் இன்றி அந்த நாளை கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த வாரத்திற்கான தினங்களை புத்துணர்ச்சியோடு கழிக்க முடியும்.

சிரிப்பு மருந்து

சிரிப்பு என்பது மிகச்சிறந்த மருந்து. தினமும் இறுக்கமாக இருப்பதை கலைக்கவும், மனஅழுத்தம், வலிகளை மறக்கவும், சிரிப்பு உதவுகிறது. மனது விட்டு சிரித்தால் கவலைகள் மறக்கப்படும். எனவேதான் வாய்விட்டு சிரிக்க உளவியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புத்துணர்ச்சி தரும் இசை

இதமான இசையை கேட்பது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். அமைதியான முறையில் இசையை கேட்பது மன அழுத்தம் தரும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும், எனவேதான் அன்றாட அலுவல்களினால் ஏற்பட்ட சிக்கல்களை களைய இசையை கேட்க வலியுறுத்துகின்றனர் உளவியலாளர்கள்.

நடத்தல் அவசியம்

வாக்கிங் என்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். இது நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதனால்தான் மருத்துவர்கள் நடப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர். வீட்டிற்குள்ளேயே டிரட்மில் வைத்து வீட்டிற்குள் நடப்பதை விட திறந்த வெளியில் நடக்க வலியுறுத்துகின்றனர்.

தினம் ஒரு நற்செயல்
இன்று புதிதாய் பிறந்தோம் என்பதைப்போல தினம் ஏதாவது ஒரு நன்மை, யாருக்காவது ஒரு உதவி செய்யவேண்டும். அது மனதிற்கு புத்துணர்ச்சி தருவதோடு வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தரும்.

போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் ....

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் ஆண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப்பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்கவைத்துக்கொள்ள என்னதான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா? எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று ஏங்கும் ஆண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவிகிதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

ஆண்கள் அதிக அளவில் சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் சருமம் பாதிக்கப்படுகிறது. எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, முகத்தை பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மருத்துவம்

இளமையை தக்கவைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்குண்டு. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினம் 6 டம்ளர் தண்ணீர் பருகுவது அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் உணவுகள்

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும். மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

புகை, மது கூடாது

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் வயதான தோற்றம் எளிதில் வருகிறது.

ஆழ்ந்த உறக்கம்

சரியான உறக்கம் இல்லாமல் இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. அது சோர்வையும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

மகிழ்ச்சியே இளமைக்கு வழி

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், தாம்பத்ய உறவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான உறவு இளமையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடும். அப்புறம் பாருங்கள் நீங்களும் ஆணழகன் தான்.

Friday 13 January 2012

ஏழு பிறவியிலும் என்னுடன் வருவாய்…

உன்னை கரம் பிடித்து
எட்டாண்டுகள் ஆகின்றன
ஆனால் எண்பது ஆண்டுகள்
வாழ்ந்த மனத்திருப்தி எனக்கு….


நேற்று போல் இருக்கிறது
நாம் சந்தித்த நிமிடம்…


உன்னை முதலில் பார்த்த
அந்த தருணம்
இன்னும் என் நினைவில்
பசுமையாய் நிழலாடுகிறது…


எல்லோரும் என்னைப் பார்க்க
நான் மட்டும்
வாழ்க்கை முழுவதும்
என்னை கூடவே அழைத்துச் செல்லும்
உன் கரங்களைப் பார்த்தேன்…


சுற்றமும் நட்பும்
புடைசூழ நாம் இணைந்தோம்
ஆனந்தம் பொங்க
அமர்ந்திருக்கையில்
நம் இருவரின் கரத்தையும்
மூத்தோர்கள் இணைத்து வைத்தனர்
உன் பிடியில்தான் எத்தனை உறுதி!


அன்று பிடித்த கரத்தை
இன்றுவரை விடாமல் தொடர்கின்றாய்…
எத்தனை முறை புயலடித்தும்
எதுவும் செய்ய முடியவில்லை….


எழுபிறவி இருப்பது உண்மையென்றால்
இப்பிறவி மட்டுமல்ல
அனைத்திலும் நீயே
என் கரம் பற்றவேண்டும்.

புற்றுநோயை விரட்டும் இந்திய உணவுகள்

புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒருநோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்பநிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சத்துநிறைந்த காய்கறிகளும் பழங்களுமே புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.


மஞ்சளும் இஞ்சியும்


மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்


கிரீன் டீயின் வேதிப்பொருட்கள்


பச்சைத்தேயிலையில் EPIGALLOCATECHIN GALLATE (EGCG) மற்றும் CATECHINS ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான CATECHINS ஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.


புற்றுநோயை குறைக்கும் வைட்டமின் டி


மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. கேட்பிஷ், சல்மான் உள்ளிட்ட மீன் வகைகள் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.


பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.


பச்சை காய்கறிகள் பழங்கள்


அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான ஆன்டிஆன்ஸிடென்ட்ஸ் ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காய்கறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.


முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். DINDOLYLMETHANE, SULFORAPHANE, SELENIUM ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.


மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் புற்றுநோயை தடுக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத் தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.


கருப்பு சாக்லேட்


சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் மருத்துவக்குணமுள்ள பாலிபினோல்ஸ் ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள கேட்சின்ஸ் என்னும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவற்றையெல்லாம் கேட்சின்ஸ் வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.


சிவப்பு ஒயின்


சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் RESVERATROL என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.


புற்றுநோயின் தொடக்கமே உடம்பில் உள்ள டி என் ஏ எனப்படும் மரபணுக்கள் சேதமடைவதுதான். பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

முதுமையை துரத்தும் தண்ணீர்!

நம் உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.


வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.


முகப் பளபளப்பு


அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.


இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.


வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.


திரும்பிய இளமை


செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.


இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.


சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.


தண்ணீரின் அவசியம்


உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.


நான்கு லிட்டர் தண்ணீர்


நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,


சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!

மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.


தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.


கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.


தண்ணீர் மருத்துவம்


எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்:


உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பக்கவிளைவு கிடையாது


பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.


முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.


தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!

உணவுக்குப்பின் சூடா குடிங்க... புற்றுநோய் வராது! – மருத்துவர்கள் அறிவுரை

உணவு உண்ட உடன் தண்ணீர் குடிப்பது குறித்து பல வித கருத்துக்கள் நிலவுகின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றனவாம் எனவே உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.


டயட்டினை பின்பற்றுபவர்கள் சிறிதளவு உணவு உண்ணவேண்டும் என்பதற்காக அதிகமான தண்ணீரை அருந்துகின்றனர். மொத்தத்தில் தண்ணீரானது உடல் நலம் காக்கும் உன்னத மருந்தாகும்.


இளம் சூடான வெந்நீர்


உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புற்றுநோய் செல்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.


இதன் மூலம் உணவானது எளிதில் செரிமானமாவதோடு கெட்டக் கொழுப்புக்கள் ஆங்காங்ககே சேர்ந்து உடலுக்கு கெடுதல் ஏற்படுவது தடுக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே தான் உணவு உண்டபின்னர் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கவும் பரிந்துரைக்கின்றனர்.


குளுமையான நீர் கூடாது


அதேசமயம் ஜில் நீர் இதற்கு எதிர்மறையான செயல்பாட்டினை ஏற்படுத்துமாம். அநேகம் பேர் உணவு உண்டவுடன் ப்ரிட்ஜில் வைத்த குளிர் நீர் பருகுவார்கள். இது இதயநோய், கேன்சர் போன்றவற்றிர்க்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், உண்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது.


நோய்களுக்கு காரணம்


இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே வெது வெதுப்பான தண்ணீரே உடல் நலத்திற்கு ஏற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.