Friday 13 January 2012

ஏழு பிறவியிலும் என்னுடன் வருவாய்…

உன்னை கரம் பிடித்து
எட்டாண்டுகள் ஆகின்றன
ஆனால் எண்பது ஆண்டுகள்
வாழ்ந்த மனத்திருப்தி எனக்கு….


நேற்று போல் இருக்கிறது
நாம் சந்தித்த நிமிடம்…


உன்னை முதலில் பார்த்த
அந்த தருணம்
இன்னும் என் நினைவில்
பசுமையாய் நிழலாடுகிறது…


எல்லோரும் என்னைப் பார்க்க
நான் மட்டும்
வாழ்க்கை முழுவதும்
என்னை கூடவே அழைத்துச் செல்லும்
உன் கரங்களைப் பார்த்தேன்…


சுற்றமும் நட்பும்
புடைசூழ நாம் இணைந்தோம்
ஆனந்தம் பொங்க
அமர்ந்திருக்கையில்
நம் இருவரின் கரத்தையும்
மூத்தோர்கள் இணைத்து வைத்தனர்
உன் பிடியில்தான் எத்தனை உறுதி!


அன்று பிடித்த கரத்தை
இன்றுவரை விடாமல் தொடர்கின்றாய்…
எத்தனை முறை புயலடித்தும்
எதுவும் செய்ய முடியவில்லை….


எழுபிறவி இருப்பது உண்மையென்றால்
இப்பிறவி மட்டுமல்ல
அனைத்திலும் நீயே
என் கரம் பற்றவேண்டும்.

1 comment:

  1. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! பொங்கலுக்கும்!!

    ReplyDelete